Thursday 18 July 2013

Tamil - Kavithai

விலைமாதுவை தேடி
சென்று இன்பம் காணும்
அற்பவெறியன் அதற்குமுன்
அவளுடன் கூடியவன்
எந்த சாதியென்று
விளக்கம்கேட்டு நிற்பதில்லை

உயிருக்குபோராடும் பேராபத்தில்
உதவிசெய்யும் மனிதநேயர்
கொடையளிக்கும் குருதியில்
மதத்திற்கான பரிசோதனை
எதுவும் நிகழ்த்தப்படுவதில்லை.

செத்து சாத்திவைக்கப்பட்டிருக்கும்
பிணம் எந்த இனமானாலும்
ஒருநாள் அதிகமாக
வீட்டில் வைத்திருக்க
எவனுக்கும் மனமில்லை.

உச்சகட்ட நெருக்கடியில்
உறவுகள் கைவிரிக்க
நலம்விரும்பும் நண்பர்
ரொக்கமாக தருகிற பணத்தில்
ஏற்கனவே பதிந்துள்ள
கைரேகைகள் பற்றி
எவ்வித கவலையுமில்லை.

பிறகென்ன
சாதி
மதம்
இனம்
மண்ணாங்கட்டி
மயிரு.

கத்தரி இருப்பவர்கள்
கிளைகளை நறுக்குவோம்
கோடரி சுமப்பவர்கள்
மரத்தினை நெருங்குவோம்.

கட்டிக்காப்பாற்ற அவைகள்
கனிநிழல் மரமல்ல

ஈரத்தை உறிஞ்சி
பாரத்தை ஏற்றும்

வெட்டி வீழ்த்தப்படவேண்டிய
கருவேலமரம்.

- கவிதை நேசன்

No comments:

Post a Comment